தேசபந்துவிடம் பலதரப்பு விசாரணை!
tamil news:
பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காவற்துறை மாஅதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் சொத்துக்கள் குறித்து கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையகம் தனது விசாரணைகளை பலகோணங்களில் ஆரம்பித்துள்ளது.
அதாவது தென்னகோனின் கோகந்தர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் நிரப்பப்பட்ட பொதிகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை வாங்குவதில் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றங்களை செய்தாரா என்பதை ஆராய குற்றப்புலனாய்வுதுறையும் விசாரணையை ஆரம்பித்தது.
ஆனால் தென்னக்கோனின் பல சொத்துக்கள் அவரது பெயரில் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே அவர் மற்றவர்களை மறைமுகமாக பயன்படுத்தி சொத்துக்களை பெற்றாரா? என்பது குறித்து விசாரணை கவனம் செலுத்தப்படுகின்றது.
இதற்கிடையில் அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்ட காலத்தில் கடமை தவறியதற்காக தென்னக்கோனுக்கு எதிராக அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் திலீப் பேரிஸ் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் தென்னகோன் மீதான கையூட்டல் ஒழிப்பு ஆணையக்கத்தின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசப்பந்த தென்னகோன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உயர்நீதிமன்றத்தால் தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவர் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் காவற்துறை மாஅதிபராக உள்ளார்.
இதனையடுத்தே மூத்த காவற்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிக பதில் காவற்துறை மாஅதிபராக பணியாற்றுகின்றார்.
இதேவேளை காவற்துறை மாஅதிபரை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் தேசிய காவற்துறை ஆணையக்கத்துக்கும் இல்லை.
ஜனாதிபதியின் பரிந்துறையின் பெயரில் காவற்துறை மாஅதிபர் அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்படுவதால்,
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதி மற்றும் பேரவையின் பொறுப்பாகும்.
அத்துடன் காவற்துறை மாஅதிபரை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு குற்றவியல் பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.