அரசாங்கத்தின் நிலைப்பாடு முந்தைய அரசாங்கங்களிலிருந்து மாறவில்லை! ரவூப் ஹக்கீம்
tamil news:
மனித உரிமை பேரவையில், அரசாங்கம் முந்தைய நிர்வாகங்களின் நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றங்களை கொண்டுவந்ததாக காணப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் தெளிவாக விளக்கவேண்டியதென இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(15.03.2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதைத் தெரிவித்தார்.
அவரது மேலும் கருத்துக்களில்,
கடந்த மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற 25ஆவது மனித உரிமை பேரவையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருந்தார்.
அந்த அமர்வில், கடந்த ஆண்டு எழுப்பப்பட்ட பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை, முந்தைய அரசாங்கங்களின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதாக மாறவில்லை.
மனித உரிமைகள் தொடர்பான சில முக்கியமான விவகாரங்களை அமைச்சர் முன்வைத்திருந்த போதிலும்,
அவை வெறும் பாணியாகவே பார்க்கப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெளிவான நடவடிக்கைகள் அவசியம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயல் திட்டங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக தகவல் வழங்க வேண்டும்.
இதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் காலதாமதமாகிக் கொண்டே போகின்றன, இதனை சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்நிலையில், மனித உரிமை ஆணைக்குழுவால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மனித உரிமை செயற்திட்டங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தில், நீதியும் நியாயமும் தொடர்பான உறுப்பு நாடுகளின் பார்வைகள், எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், மற்றும் 51(1) பிரேரணை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய அரசாங்கம் முன்வரவேண்டும்
அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்கான சரியான விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தும் நடவடிக்கைகள் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், மற்றும் பிற சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை ஆராய்ந்து, சரியான முடிவுகளுக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உண்மையை கண்டறிய தேவையான நடவடிக்கைகள்
அரசாங்கத்தின் புலனாய்வு துறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உண்மையை கண்டறிய முடியாது.
சிவில் சமூக அமைப்புகளும் இதில் பங்காற்ற வேண்டும்.
உண்மையை கண்டறியும் பணியில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது.
முஸ்லிம்கள், தமிழர்கள், மற்றும் சிங்களவர்கள் எனப் பலரும் கடந்த காலத்தில் பாரிய துன்பங்களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இனி அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.