கருணா உட்பட போர்க்குற்றத் தரப்புக்கு எதிரான தடை - மகிழ்ச்சி தெரிவித்த உமாகுமரன்!
tamil news:
"இலங்கை உள்நாட்டு போரின்போது கடுமையான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தடைகள் அறிவிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்."
இவ்வாறு இலங்கை வம்சாவழியைச்சேர்ந்த பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புபோரின்போது கடுமையான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்பான முன்னாள் இலங்கை முப்படை தளபதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு இங்கிலாந்து நேற்றையதினம்(25.03.2025) அதிரடியாக தடைகளை விதித்திருந்தது.
இலங்கை உள்நாட்டுபோரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்கு பொறுப்பான நான்கு நபர்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
இதில் போர்நியதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அடங்கும்.
அந்தவகையில் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரே இங்கிலாந்து தடைகள் விதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் சொத்துக்களை சேகரித்துவைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.