பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்!
tamil news:
நேற்றையதினம் இரவு(11.03.2025) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேடவைத்திய நிபுணராக பயிற்சி பெற்றுவரும் பெண் வைத்தியர் ஒருவர், அவரது உத்தியோகபூர்வ தங்குமிடத்தில் வைத்து அடையாளந்தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதனையடுத்து சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கண்டுபிடிக்க ஐந்து காவற்துறை குழுக்கள் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியநிபுணராகப் பயிற்சி பெற்றுவரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் நேற்றிரவு(11.03.2025) வழக்கம்போல பணிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
குறித்த வைத்தியர் கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேடவைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.
வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் வந்த ஒருநபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்தமுடியாதபடி கட்டிய சந்தேகநபர் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச்சொல்லிஇ வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச்சென்று சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார்.
தொடர்ந்து சந்தேகநபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகநபர் தப்பிஓடிய நிலையில் வைத்தியரின் கைப்பேசியையும் திருடிச்சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர் தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் மாவட்ட அதிகாரிகள் இன்று(11.03.2025) அனுராதபுரம் காவற்துறையில் முறைப்பாடு அளித்தனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது சந்தேகநபரைத் தேடி அப்பகுதி முழுவதும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அனுராதபுரம் காவற்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இன்று(11.03.2025) பிற்பகல் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபரை உடனடியாக கைதுசெய்யவேண்டும் எனவும், தவறினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் சந்தேகநபர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.